வைகோவுக்கு கருணாநிதி, ராமதாஸ் ஆதரவு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா மிரட்டியுள்ளதற்குபல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், கடந்த ஆண்டு என்னை ஜெயலலிதா அரசு கைது செய்தது. அப்போது போலீஸாரின் பிடியிலிருந்துநான் விடுபட வேண்டி கதறியழுத காட்சி குறித்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட நன்றாக நடித்துள்ளதாக மதிமுகவைச் சேர்ந்தமத்திய அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அவர்கள் அளவுக்கு கல் நெஞ்சம் கொண்டவன் அல்ல நான். பொடா சட்டமானாலும் சரி, தடா சட்டமானாலும் சரி, அதை அரசியல்உள்நோக்கத்திற்காக பயன்படுத்துவதை திமுக ஆதரிக்காது.
இதே ஜெயலலிதா ஆட்சியின்போதுதான் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவரது கணவர் ஜெகதீசனையும் போலீஸார் கைதுசெய்து ஒரு ஆண்டு சிறையில் வைத்திருந்தனர்.
எனவே, வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்யப் போவதாக இவர்கள் கூறியுள்ளது, இந்த ஆட்சியைப் பொருத்தவரைஆச்சரியமான விஷயமே அல்ல என்று கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோவை கைது செய்ய உள்துறை அமைச்சர் அத்வானி அனுமதிப்பாரா என்று கேட்டபோது, என்னால் யூகித்துபதில் சொல்ல முடியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.
வைகோவை கைது செய்தால் ஜெயலலிதாவை ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணியையும் இதே போலகைது செய்ய வேண்டும் அல்லவா என்று கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று கருணாநிதி பதில் தந்தார்.
பழ.நெடுமாறனையும் ஜெயலலிதா கைது செய்ய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும், எனக்கு தெரியவில்லைஎன்று பதில் சொன்னார் கருணாநிதி.
ராமதாஸ் கண்டனம்:
ஜெயலலிதாவின் கைது எச்சரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவை ஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்புக்குஆதராவாக பேசுவதால் ஒருவரை கைது செய்துவிட முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது. இலங்கையிலேயே புலிகள் மீதானதடையை நீக்கப் போகிறார்கள்.
தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் கவனத்தை அரசின்தோல்விகளில் இருந்து திசை திருப்ப இந்த வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என்ற ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications