கைதானார் வைகோ: போலீஸ் வேனில் மதுரை கொண்டு செல்லப்பட்டார்
சென்னை:
இன்று மாலை 4.45 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வைகோவை மதுரை ஊரக மாவட்டஎஸ்.பி. ஆயுஷ் மணி திவாரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
விமான நிலையத்துக்குள் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். அவரைச் சந்திக்க அவரது மனைவி, மகனுக்கு அனுமதி தரப்பட்டது.பின்னர் சில மதிமுகவினர் இடையே பேசிய அவர், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக போராடுங்கள் என்றார்.
நிருபர்களிடம் பேசிய வைகோ, ஜெயலலிதா அரசு செய்யாத அராஜகம் எதையும் நான் செய்துவிடவில்லை. தமிழகத்தில் வன்முறையைமதிமுக தூண்டியதில்லை. தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்ததிலை. ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது பஸ்களைஎரித்தவர்கள் அதிமுகவினர். இவர்கள் செய்யாத அட்டூழியத்தை நாங்கள் செய்துவிடவில்லை. தமிழகத்தில் அமைதியை மதிமுகஒருபோதும் குலைத்ததில்லை என்றார்.
பின்னர் அவர் மதுரை காவல்துறையின் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேனில் ஏறிய அவர் தனது அதன் வாயிலில் நின்று தனது கட்டைவிரலை உயர்த்தி அங்கிருந்த மதிமுக தொண்டர்களிடம் தம்ஸ்-அப் சைகை காட்டினார். சிரித்த முகத்துடன் காணப்பட்ட அவர்உடனடியாக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வைகோவைக் கைது செய்ய மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடாசலபதி வாரண்ட்பிறப்பித்தார். இந்த வாரண்டுடன் மதுரையில் இருந்து தனிப் படை போலீசார் நேற்றிரவு கார் மூலம் சென்னை புறப்பட்டனர்.
காலையிலேயே சென்னை வந்துவிட்ட இந்தப் படையினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுசென்னை விமான நிலையம் வந்தனர். ஆனால், ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 11.30 மணிக்குசென்னை வர வேண்டிய வைகோ ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மாலை 4.45 மணிக்குத் தான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்வந்திறங்கினார்.
அவரை வரவேற்க மத்திய அமைச்சர்களாக கண்ணப்பன், பொன்னுசாமி ஆகியோர் காலையிலேயே மும்பையில் இருந்து சென்னைவந்துவிட்டனர். வைகோவை வரவேற்க மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மதிமுகவினர் சென்னை வந்தனர்.
ஆனால், அவர்களை விமான நிலையத்திற்கு நீண்ட தொலைவிலேயே தடுத்தி நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர். தொடர்ந்துசெல்ல அனுமதி கோரி வாக்குவாதம் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேன்களிலும் ஜீப்களிலும் கொண்டு சென்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மதிமுக தொண்டர்கள் சென்னைக்குப் புறப்படும் முன்பே நேற்று மாலையிலேயே கைதுசெய்யப்பட்டுவிட்டனர். இதுவரை சுமார் 5,000 பேர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து பலரும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
மீனம்பாக்கம் விமான நிலையம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால், செங்கை கிழக்குமாவட்ட போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை வைத்து எல்லா வாகனங்களையும்சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
இதனால் விமான நிலையத்துக்குள் மதிமுக தொண்டர்கள் யாரும் வர முடியவில்லை. விமான நிலையத்தில் பயணிகளைவிட போலீசாரின்தலைகள் தான் அதிகம் இருந்தனர். விமான நிலையத்தின அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக வைகோ உள்ளிட்ட 9 மதிமுக நிர்வாகிகள் மீதுபொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.
வைகோ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
|