2 திருச்சி கொலையாளிகள் புதுவையில் பதுங்கல்: சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
பாண்டிச்சேரி:
பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த 2 கொலையாளிகள் பாண்டிச்சேரியில் போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பாரதி ஆகிய இருவரும் பயங்கரமான ரவுடிகள். பணம் கொடுத்தால் கொலை செய்யும் கூலிப் படையைச் சேர்ந்தவர்கள். பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக திருச்சி போலீசார் இவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த இரண்டு ரவுடிகளும் பாண்டிச்சேரியில் பதுங்கியிருப்பதாகத் திருச்சி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாண்டிச்சேரி விரைந்த தனிப் போலீஸ் படையினர் அந்நகரப் போலீசாரின் உதவியுடன் ரவுடிகளைத் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி-பாண்டிச்சேரி போலீசார் இன்று காலை அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். ஆனால் அந்த இரு ரவுடிகளும் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் காட்டி போலீசாரை மிரட்டி தப்பிக்க முயற்சித்தனர்.
இருந்தாலும் துப்பாக்கி முனையில் போலீசாரும் வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்ததால் அந்த ரவுடிகளால் எளிதாகத் தப்பிச் செல்ல முடியவில்லை.
சுமார் ஐந்து மணி நேரம் ரவுடிகள் "கண்ணாமூச்சி" ஆடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு வழியாகப் போலீசார் திடீரென்று அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து இரண்டு ரவுடிகளையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்கள், செல்போன் மற்றும் ஒரு மாருதி கார் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து அந்தக் கொலைகார ரவுடிகள் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சுமார் ஐந்து மணி நேரம் இச்சம்பவம் நீடித்ததால் முத்தியால்பேட்டை பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications