அண்டர்டேபிள் டீலிங்..கல்லாக் கட்டத் தொடங்கிய பிஏக்கள்! தயங்கும் அமைச்சர்கள்! ராடாரை பறக்கவிட்ட தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் பணத்தை தொட மாட்டேன்.. தொட்டவர்களை விடமாட்டேன்.. தொடவும் விடமாட்டேன் என வீர வசனம் பேசிய முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் பிஏக்கள் குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அமைச்சர்களின் பிஏ என்ற பெயரில் துறை அதிகாரிகள் மட்டும், காண்ட்ராக்டர்களிடம் சிலர் வசூல் வேட்டையை துவக்கி இருப்பதாக பரபரப்பு புகார் முன்வைக்கப்படுகிறது. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் அமைச்சர்களின் பிஏக்கள் குறித்து வெளிவந்திருக்கும் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் சக்தி.. தீய சக்தி என முழங்கி ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன விஜய். தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படையான ஊழலற்ற லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என அவர் பேசியது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆட்சியில் அமர்ந்த உடனேயே அவரது முதல் மேடைப்பேச்சில் 'அதிகாரம் இருக்கிறது ஆடி விடுவோம் என யாரும் நினைக்க வேண்டாம்' என எச்சரிக்கையும் விடுத்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. தொடவும் விடமாட்டோம்.. தொட்டவர்களையும் விடமாட்டோம் என பஞ்ச் பேசியதால் துள்ளிக் குதித்தனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

tvk vijay tn Government

விஜய் அரசு

இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் புது முகங்கள் தான். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுத்தமான நிர்வாகத்தை அவர்கள் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் இடையேயும் இருந்தது. உண்மையை சொல்லப்போனால் அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கிறது.

அமைச்சர்கள் பிஏ

அதே நேரத்தில் அமைச்சர்களின் பிஏக்களாக நியமிக்கப்பட்ட சிலர் அந்த எதிர்பார்ப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர்களிடம் சிலர் பொருளாதார சூழல் மற்றும் வருங்காலங்களில் தேவை ஏற்படும் எனக் கூறி அவர்களையும் கல்லா கட்ட வைத்திருக்கிறார்களாம்.

பணப்பரிவர்த்தனை

அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடலாம் அதற்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என சில பிஏக்கள் அமைச்சர்களிடம் கூறி வருவதாகவும், நிர்வாக முடிவுகளில் 'பணப்பரிவர்த்தனைகளை' தூண்டி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விரைவில் இடைத்தேர்தல் வருகிறது செலவு செய்ய வேண்டும் என கூறி அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செலவுகளை ஏற்க வேண்டி இருக்கும் என்பதால் அதற்கான நிதியை திரட்ட சில ஆலோசனைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் விஜய்

இடைத்தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தேர்தல் பிரச்சாரம், தொண்டர்களுக்கான செலவுகள், போக்குவரத்துச் செலவு என 'பெரிய அமவுண்ட்' தேவைப்படும். எனவே தற்போதைய கல்லா கட்டிக் கொள்வது நல்லது என அமைச்சர்களை மனதளவில் மாற்றும் முயற்சிகளும் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன. இது முதல்வர் விஜய்க்கு தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுத்துவிடுவார் என தயக்கம் காட்டினாலும், எந்த வழியில் செயல்பட்டால், எப்படி பணம் வரும், எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம் என தங்களுக்கு தெரியும் என தூபம் போட்டு வருகிறார்களாம்.

பண வசூல்

இதற்கிடையே பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுகள், காண்ட்ராக்ட் உள்ளிட்டவற்றுக்கு பண வசூலிக்கும் நடவடிக்கைகளை சில பிஏக்கள் தொடங்கி விட்டதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தில் பிஏக்கள் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தமிழக வெற்றி கழகம் தனிக்கவனம் எடுத்து செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் இதற்கான தனியாக ஒரு டீமையே வைத்திருக்கிறார்களாம். அதே நேரத்தில் பிஏக்கள் வசூலில் ஈடுபடுகிறார்கள் என்பது திமுக திட்டமிட்டு பரப்பும் குற்றச்சாட்டு.. அப்படியெல்லாம் இல்லை என அடியோடு மறுக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+