என் கார், டெலிபோனை அரசு எடுத்துக் கொள்ளலாம்: தலைமை நீதிபதி
சென்னை:
தங்களுக்குத் தரப்பட்ட கார்கள், டெலிபோன்களை இன்று மாலைக்குள் திரும்ப எடுத்துச் செல்லுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் நீதிமன்றக் கட்டணங்களை அரசு உயர்த்தியது. இது தொடர்பாக தன்னடன் ஆலோசிக்கவில்லை என தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்தார்.
இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உயர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதை தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இன்று விசாரணை நடந்தபோதுகட்டணம் ஏன் திடீரென உயர்த்தப்பட்டது எனறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், நீதிபதிகளுக்கு புத்தம் புதிய கார்கள், வீடுகள், டெலிபோன்கள் வழங்கியதுபோன்ற காரணங்களால் அரசுக்கு செலவு அதிகரித்துவிட்டது. இதனால் தான் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றார்.
அரசு வழக்கறிஞரின் இந்த பதிலால் கடுப்படைந்த தலைமை நீதிபதி, எங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்ததால் தான் இந்தக் கட்டணம்உயர்த்தப்பட்டது என்றால் எங்களுக்கு அந்த வசதிகளே வேணடாம்,
நீங்கள் (அரசு) கொடுத்த கார்கள், டெலிபோன்களை இன்று மாலைக்குள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறேன்.எங்களுக்கு தரப்பட்ட சலுகைகளால் நீதிமன்றக் கட்டணங்களை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதை ஏற்க முடியாது.
எங்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுத்தால் கட்டணத்தை உயர்த்த வேண்டி வரும் என்பதை ஏன் முன்பே எங்களிடம்தெரிவிக்கவில்லை?
நீதித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி, அது செலவிடப்பட்ட முறைகள் என்ன என்ற விவரத்தை உடனே இந்த அரசு நீதிமன்றத்தில்சமர்பிக்க வேணடும் என்றார்.
இந்த விவரங்களை மாலையில் ஒப்படைப்பதாக அரசு வழக்கறிஞர் சந்திரன் அவகாசம் கேட்டார். இதையடுத்து அவருக்கு மாலை வரைநீதிமன்றம் அவகாசம் தந்தது.