இலவச மின்சாரத்தை ரத்து செய்வதா?- இளங்கோவன் கொந்தளிப்பு
சென்னை:
தமிழக விவசாயிகள் ஏற்கனவே வேதனையில் நொந்து போயுள்ள நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசின் நிர்வாக சீர்கேட்டினால் கஜானா காலியாகி விட்டது. எங்குபார்த்தாலும் சம்பளமில்லை, ஆட்குறைப்பு, போனஸ் இல்லை என்பதே பேச்சாக உள்ளது.
விவசாயிகள் ஏற்கனவே வறட்சியல் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு தந்போது இருக்கும் ஒரே ஆறுதல் இலவச மின்சாரத் திட்டம் தான். தற்போது அதிலும் தமிழக அரசு கை வைக்க நினைப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது.
இப்போது கட்டணம் செலுத்தக் கூறும் அரசு, விவசாய பம்ப்செட்டுகளுக்கு மீட்டர் பொருத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்தால் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி வரும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் இளங்கோவன்.
திமுக கண்டனம்:
இதற்கிடையே, இதுகுறித்து திமுக விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் கூறுகையில்,
கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு கூறியிருப்பது, இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.
இதைக் கண்டித்து திமுக விவசாய அணி சார்பில் வரும் 27ம் தேதி சென்னையில் விவசாயிகள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் என்றார் ராமலிங்கம்.
-->












Click it and Unblock the Notifications