உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி வக்கீல்கள் ஸ்டிரைக்
சென்னை:
உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி நாடு முழுவதும் வக்கீல்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். சென்னைஉள்பட தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் கூட வக்கீல்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சட்டப் பணிகள் ஆணைய சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்றுவேலைநிறுத்தப் போராட்டம் நடத்த இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்செய்வதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் வழக்குகளைத் தாக்கல் செய்யும்பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் எனவே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடைவிதிக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.பி. பட்நாயக் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இம்மனுவை விசாரித்துநேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், வக்கீல்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது என்று கூறிய உச்சநீதிமன்றம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளையும் வக்கீல்களுக்கு விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் இந்தக் கடுமையான தீர்ப்பையும் மீறி இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றுவக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் வக்கீல்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். இதனால் நாட்டின்பல்வேறு நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பணிகள்பாதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து கோர்ட்களிலும் வக்கீல்கள் வேலைக்குச் செல்லாமல்புறக்கணிப்பு செய்தனர். அரசு வக்கீல்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் கோர்ட் பணிகள் வெகுவாகபாதிக்கப்பட்டன.
லோக் அதாலத்தில் தொடரப்படும் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டால் அதுவே இறுதித் தீர்ப்பாகும், மேல் முறையீடுசெய்ய முடியாது என்று சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது கொடுமையானது. இதனால் தவறு செய்பவர்கள்போலி ஆவணங்களைக் காட்டி வழக்கிலிருந்து விடுபட முடியும். எனவே இந்த சட்டத் திருத்தம் வாபஸ் பெறப்படவேண்டும் என்று வக்கீல்கள் கூறினர்.
முன்னதாக சென்னை வக்கீல் சங்க செயலாளர் தமிழ்மணி கூறுகையில்,
இது வெறும் எதிர்ப்பைக் காட்டும் போராட்டம்தான். எங்களது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனவே உச்சநீதிமன்றத்தீர்ப்பை பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
திடுதிப்பென்று நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. துவக்கத்தில் தர்ணா நடத்தினோம். பின்னர் படிப்படியாகஎங்களுடைய போராட்ட நடவடிக்கைகள் தீவிரமாகின. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்கிறோம் என்றார் தமிழ்மணி.
சென்னை பெண் வழக்கறிஞர்கள் சங்கம், உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் கூடஇன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதற்கிடையே சில வக்கீல்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கண்டித்துள்ளனர். இதனால் பல்வேறுவழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஏராளமான பொதுமக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும்அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-->