பாளையங்கோட்டை சிறை கைதிகளிடம் செல்போன்கள்?
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் புழங்குவதாக வந்த தகவலையடுத்து அங்கு கூடுதல் சிறைத்துறை டி.ஜி.பி. போலோ நாத் திடீர் சோதனை நடத்தினார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அடிக்கடி கைதிகள் தப்புவது சகஜமாகி விட்டது.
மிகுந்த பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கைதிகள் அடிக்கடி தப்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் கைதிகளிடயே செல்போன் நடமாட்டம் இருப்பதாக சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பிக்குத் தகவல் வந்தது.
இந்த செல்போன்கள் மூலம் வெளியே உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு, எவ்வாறு போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிப்பது என்பது குறித்து கைதிகள் திட்டம் போடுவதாகவும் தகவல் வந்தது.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறைக்கு போலோநாத் திடீரென்று வந்து அதிரடி சோதனை மேற்கொண்டார். சிறையில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் அவர் சென்றார். அவர் முன்னிலையிலேயே அனைத்துக் கைதிகளும் கடுமையாகச் சோதனை செய்யப்பட்டனர்.
ஆனால் செல்போன்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் கைதிகளைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கும் படி சிறை அதிகாரிகளுக்கு போலோநாத் உத்தரவிட்டார்.
பின்னர் கைதிகள் தப்பிவிடாதபடி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலோநாத் சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிறையிலிருந்தோ அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போதோ கைதிகள் தப்பி விடாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் அவர் சிறைப் போலீசாருக்கு வழங்கினார்.
இதற்கிடையே சிறையில் கைதிகளுக்கு அசைவ உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக கைதிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது. அது குறித்தும் டி.ஜி.பி. விசாரணை நடத்தினார். கைதிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உணவு வகைகளை அளிப்பதில் குறை இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
சிறைத்துறை டி.ஜி.பி. திடீரென்று வந்து சோதனை நடத்தியதால் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளும் போலீசாரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர். சந்தேகப்பட்ட அளவுக்கு கைதிகளிடமிருந்து செல்போன் போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை என்பதை அறிந்த பின்னர்தான் அவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-->