"இறந்தவர்" திரும்பினார்: "பேய்" என நினைத்து மக்கள் கல்லடி
காரைக்கால்:
இறந்து போனவர் என்று கருதப்பட்ட ஒரு நபர் உயிருடன் திரும்பி வந்ததைக் கண்ட ஒரு கிராமத்தினர் அவரைப் "பேய்" என்று நினைத்து கல்லால் அடித்து விரட்டினர்.
காரைக்கால் அருகே பூவம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு மகேஸ்வரி (12), மதனசெல்வி (7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உண்டு.
ரவிச்சந்திரன் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதால், தமிழரசி அடிக்கடி தன்னுடைய தாய் வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி ரவிச்சந்திரன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் சண்டை போட்ட கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய ரவிச்சந்திரன் ஒரு வாரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பயந்துபோன தமிழரசி போலீசாரிடம் புகார் செய்தார். இந்நிலையில் நவம்பர் 8ம் தேதி பூவம் அருகே உள்ள ஒரு காட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஒரு பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.
ரவிச்சந்திரன்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் சந்தேகித்தனர். அவருடைய மனைவியும் வந்து உடலைப் பார்த்தார். ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை என்று கூறினார் அவர்.
இருந்தாலும் அது ரவிச்சந்திரன் உடல்தான் என்று முடிவு செய்யப்பட்டது. போஸ்ட்மார்ட்டத்துக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தினரே அந்த உடலைப் பெற்றுக் கொண்டு போய் அதைத் தகனமும் செய்துவிட்டனர். ஈமக்கிரியைகளும் நடந்து முடிந்தன.
இந்நிலையில் நேற்றிரவு தன் வீட்டின் கதவை யாரோ தட்டவே, அதைத் திறந்து யாரென்று பார்த்தார் தமிழரசி. அங்கே ரவிச்சந்திரன் முழு உருவத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை உயிருடன் பார்த்ததும் தமிழரசிக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இறந்துபோன (?) ரவிச்சந்திரன்தான் பேயாக மாறி வந்திருக்கிறார் என்று பயந்துபோய் படாரென்று கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கொண்டார்.
இதற்கிடையே இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் தமிழரசியின் வீட்டின் முன்பாகக் கூடினர்.
தான் ரவிச்சந்திரன்தான் என்று எவ்வளவோ கூறியும் கிராம மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. சிலர் அவருடைய கையைக் கிள்ளியும் பார்த்தனர். இருந்தாலும் அவரைப் பேய் என்றே நினைத்த மக்கள், ரவிச்சந்திரனைக் கல்லால் பயங்கரமாகத் தாக்கினர்.
இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்தார். ஆனாலும் மக்கள் அவரை விடாமல் துரத்தித் துரத்தி கல்லால் அடித்தனர்.
இதனால் ரவிச்சந்திரனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் தொகுதி எம்.எல்.ஏவான நளமகராஜனின் வீட்டுக் கதவைத் தட்டினார் அவர்.
நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ரவிச்சந்திரன் கூறியதும், அந்த எம்.எல்.ஏவும் பீதியடைந்தார். உண்மையிலேயே பேய்தான் என்று நினைத்துக் கொண்டு அவரும் அலறி அடித்தவாறே வீட்டுக்குள் ஓடினார்.
ஆனால் ரவிச்சந்திரன் கதறிய கதறலில் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு வந்த எம்.எல்.ஏ. அவரிடம் என்ன, ஏது என்று நடந்ததைத் தெளிவாகக் கேட்டறிந்தார். இதையடுத்து உடனடியாகப் போலீசாருக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அனைத்தையும் தெளிவாகக் கூறினார் எம்.எல்.ஏ.
இதைத் தொடர்ந்து தமிழரசியிடம் நடந்ததைக் கூறி, அவர் ரவிச்சந்திரன்தான் என்பதைப் போலீசார் எடுத்துக் கூறினர்.
அதன் பிறகுதான் தமிழரசியும் அவருடைய குடும்பத்தினரும் சமாதானமாகினர். ரவிச்சந்திரன் உயிருடன் வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.
இறந்து போனதாகக் கருதப்பட்ட ரவிச்சந்திரன் உயிருடன் திரும்பிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications