ஈரான், வட கொரியாவுக்கு அமெரிக்கா புதிய எச்சரிக்கை
வாஷிங்டன்:
பேரழிவு ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகள் ஈராக்கைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனஅமெரிக்கா கூறியுள்ளது.
ஈராக்கில் பேரழிவு ஆயுதம் இல்லை:
ஈராக்கில் இதுவரை பேரழிவு ஆயுதங்களான ரசாயன, அணு, உயிரியல் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை என்றும்அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லித் தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் நிருபர்களிடம் பேசுகையில், இன்னும் பேரழிவுஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை. ஆனால், ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் வேறு நாட்டுக்குள் ஈராக்பதுக்கியிருக்கலாம்.
குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுக்கு இந்த ஆயுதங்கள் போய்ச் சேர்ந்திருக்கவும் வாய்ப்புண்டு. இது பெரும்கவலை தரும் விஷயமாகும். ஈராக்கிய மக்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. ஹிட்லர், முசோலினி போன்றதோல்வியுற்ற அடக்குமுறையாளர்கள் பட்டியலில் சதாமின் பெயரும் சேர்ந்துவிட்டது என்றார்.
கேம் ஓவர்: ஈராக் தூதர்
ஐ.நாவுக்கான ஈராக்கியத் தூதர் முகம்மத் அல்-தெளரி நிருபர்களிடம் பேசுகையில்,
ஈராக்கில் அதிபர் சதாம் ஹூசேனின் ஆட்சி முடிந்துவிட்டது. இனி ஈராக்கிய மக்கள் அமைதியுடன் வாழ வகை செய்ய வேண்டியகடமை அமெரிக்காவுக்கு உண்டு. அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன்.
ஈராக்கில் போர் என்ற கேம் முடிந்துவிட்டது. எனக்கு சதாம் ஹூசேனுடன் தனிப்பட்ட முறையில் உறவு ஏதும் இல்லை. போர்தொடங்கியது முதல் எனக்கும் ஈராக்கிய தலைமைக்கும் இருந்த தகவல்தொடர்பு அறுந்துவிட்டது என்றார்.
கொரியாவுக்கு ரஷ்யா, சீனா ஆதரவு:
இதற்கிடையே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்ததில் இருந்து விலகிக் கொண்ட வட கொரியாவைக் கண்டிக்க ஐ.நாவுக்குஅமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால், வட கொரியாவை ஐ.நா. கண்டிக்கக் கூடாது என சீனாவும் ரஷ்யாவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளன.
-->