கெளரவம் பார்க்காதீர்கள்: ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
சிதம்பரம்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல் மத்திய அரசு, கர்நாடக அரசுகளிடம் பேசி காவிரிநீரைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச்செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஒரு குறுவை போய், பிறகு சம்பா போய் இப்போது அடுத்த குறுவை வந்துள்ளது. இந்த குறுவைப்பயிரையாவது பயிரிட முடியுமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, அவர்களது ஏக்கத்தைப் போக்கும் பொருட்டும், காவிரி டெல்டா பகுதியைக் காப்பாற்றும்வகையிலும், கர்நாடக மற்றும் மத்திய அரசுகளிடம் பேசி உரிய நீரைப்பெற தமிழக அரசு முயற்சிக்கவேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி உள்ளதே, அதனுடன் எப்படிப் பேசுவது என்று யோசிக்கக் கூடாது. வேறுவழியில்லை. நமக்குத் தண்ணீர் வேண்டும். அதற்காக கெளரவம் பார்க்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தீர்ப்பு வரட்டும் என்று உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடாது.
புது வீராணம் திட்டத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மக்களுக்குநல்லது நடக்க வாய்ப்பு குறைவுதான்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சரவை மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சரவைமாற்றம் செய்யும்போது, ஒரு அமைச்சர் எதற்காக நீக்கப்படுகிறார் என்பது மக்களுக்குதெரிவிக்கப்படுவதில்லை. அதை விளக்க வேண்டியது அரசின் கடமை என்றார் சிதம்பரம்.