சென்னை கப்பலில் விஷ வாயு கசிவு: வாலிபர் பலி- மூவர் மயக்கம்
சென்னை:
சென்னை துறைமுகத்தில், கப்பலில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விஷ வாயுதாக்கி பலியானார். 3 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில், தூர்வாரும் பணியில் டைடண்ட் பிரைட் என்ற கப்பல் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்தக்கப்பலின் என்ஜினில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழுதை சரிசெய்ய விஷத்தன்மை கொண்ட கார்பன் டெட்ரா குளோரைடு வாயு பயன்படுத்தப்பட்டது.
ஆனால், உரிய பாதுகாப்பு முகமூடி அணியாமல் அந்த வாயு இருந்த சிலிண்டெரை இவர்கள் திறந்தனர்.
இந்த விஷ வாயு தாக்கி ராஜேஷ் என்ற ராஜன் (வயது 27) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். நாகராஜ், கந்தன்,மணிகண்டன் ஆகிய மற்ற 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து மூவரும் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள்உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்த கப்பல்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications