தொழிற்சங்க தலைவர்கள் மீதும் பாய போகும் எஸ்மா !
சென்னை:
அரசு ஊழியர்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிதொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டப்படி வழக்குத் தொடர தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி,காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன்ஆகியோர் மீது தமிழக அரசு நேற்று எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ்வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந் நிலையில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக தொழிற்சங்கம் சார்பில் அதன் தலைவர் செ.குப்புசாமி,ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் தியாகராஜன், சி.ஐ.டி.யூ. சார்பில் ரங்கராஜன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பிறகு தான் 6,072 ஊழியர்களைத் தவிரமற்றவர்களுக்கு மீண்டும் வேலை தர தமிழக அரசு ஒத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இந்த மூன்று தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டப்படி வழக்குத் தொடரமுடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறியே இவர்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான சட்டரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் பேசப்படுகிறது.