சென்னையில் ஹாக்கி அகாடமி: தன்ராஜ் பிள்ளை முயற்சி
சென்னை:
சென்னை நகரில் ஹாக்கி அகாடமி அமைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை நாடியுள்ளார், இந்தியஹாக்கி அணியின் கேப்டன் தன்ராஜ் பிள்ளை.
தமிழரான தன்ராஜ் பிள்ளை, தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். 36 வயதைக் கடந்தும் கூடஇன்னும் அபாயகரமானவராக உலக ஹாக்கி வீரர்களால் கருதப்படும் பெருமை பெற்றவர்.
தன்ராஜ் பிள்ளை, நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் தன்ராஜ் பேசுகையில், இந்தச் சந்திப்பில் விசேஷம் எதுவும் இல்லை.விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கம் தந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துப் பேசவேண்டும், நன்றி சொல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.
சென்னை நகரில் ஹாக்கி அகாடமி அமைக்க விரும்புகிறேன். இது எனது வாழ்க்கை கனவாகும்.
இதற்காக முதல்வர் அவர்களிடம் உதவி கோரியுள்ளேன். நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன். ஜெயலலிதாமுதல்வராக இருப்பதால்தான், தமிழகத்தில் ஹாக்கி இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சாம்பியன் டிராபி ஹாக்கிப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது வருத்தமாகத்தான் உள்ளது. இருப்பினும்விளையாட்டில் வெற்றியும்,தோல்வியும் சகஜமான ஒன்றுதானே என்றார் அவர்.