பா.ஜ.கவுக்கு எதிரான தீர்மானத்துடன் திமுக மாநாடு துவங்கியது
விழுப்புரம்:
விழுப்புரம் மாநாட்டில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது, பொடா சட்டம்ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுகவின் தேர்தல் ஆயத்த மாவட்ட மாநாடு இன்று காலை விழுப்புரத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்றுதிமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் கூட்டம் கருணாநிதி தலைமையில் நடந்தது.
இக் கூட்டத்தில் பா.ஜ.கவுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று சங்கராச்சாரியார்தலைமையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பா.ஜ.க பொதுச் செயலாளர் இல.கணேசன், தமிழகத்தில் கடவுள்மறுப்பு சிந்தனை கொண்ட நாத்திகர்கள்- திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த காலம் தான் தமிழக வரலாற்றில்ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி என்று கூறியிருந்தார்.
கணேசனின் இந்தப் பேச்சுக்கு இன்று கூடிய திமுக அரசியல் குழுக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், பா.ஜ.க. தலைவர்களின் இது போன்ற பேச்சுக்கள் துரதிஷ்டவசமானவை,விஷமத்தனமானவை. இது போன்ற பேச்சுக்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை குலையலாம்.அதைத் தடுக்க வேண்டிய கடமை பா.ஜ.க. மத்தியத் தலைவர்களுக்கு உண்டு.
இவ்வாறு காட்டான தீர்மானத்துடன் திமுகவின் மாநாடு இன்று தொடங்கியது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
தேசிய அரசியல் சூழல் குறித்து கட்சியினருடன் விவாதிப்போம். கூட்டணி குறித்து திமுக தலைவர்கள்,தொண்டர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அடுத்த தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக இது இருக்கும். அதேநேரத்தில் கூட்டணி குறித்து மாநாட்டில் எந்த முடிவும் அறிவிக்க மாட்டோம். அதைத் தொடர்ந்து நடக்கும் திமுகபொதுக் குழுவில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.
பொடா துஷ்பிரயோகம் குறித்தும் விவாதிப்போம். பொடாவுக்கு எதிரான போராட்டத்தில் குதிப்பது குறித்தும்விவாதிக்கப்படும். (பொடாவுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு கருணாநிதி அழைப்பு விடுப்பார் என்றுகூறப்படுகிறது).
பொடா சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணயின்ஒருங்கிணைப்பாளருமான பெர்னாண்டஸ் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. யார் என்ன சொன்னாலும்பொடவை திமுக எதிர்க்கும் என்றார் கருணாநிதி.
இந்த மாநாட்டிற்கு நீங்கள் தலைமை தாங்காமல், ஸ்டாலினை தலைமை தாங்க வைத்துளீர்களே. இதன்மூலம்அவரை மெதுவாக கட்சிக்குத் தலைவராக்க முயற்சி நடக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது,
எனக்கு 26 வயது இருக்கும்போது திருநெல்வேலியில் நடந்த திமுக மாநாட்டிற்கு தலைமை வகிக்கச் செய்தார்அறிஞர் அண்ணா. ஸ்டாலினுக்கு இப்போது வயது 50 என்று பதிலளித்தார் கருணாநிதி.
அப்போது இடைமறித்த பொதுச் செயலாளர் அன்பழகன், இது கட்சியின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.எங்களைப் போன்ற மூத்தவர்களிடம் இருந்து கட்சியின் இளைய தலைமுறையிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதுஎன்ன தவறு என்றார்.
அயோத்தி விவகாரத்தை வி.எச்.பி. மீண்டும் கிளப்புவது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, பதிலளிக்க அவர்மறுத்துவிட்டார்.
இன்று மாலை திமுக தொண்டர்களின் பேரணி நடக்கிறது.
இந்த மாவட்ட மாநாடு, மாநில மாநாடுகளையே மிஞ்சும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுளளது.
மாநாட்டு திடலுக்குள்ளேயே நடைபெறவுள்ள இந்தப் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பேரணிக்குமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி,பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தனி மேடையில் இருந்தவாறு இதைபார்வையிடுகிறார்கள். திமுகவின் பல்வேறு அணியினரும் அணிவகுத்து வரவுள்ளனர்.
மாநாட்டின் 2-வது நாளான நாளை துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசுகிறார். நாளை மறுநாள்,மாநாட்டின் நிறைவின்போது, கருணாநிதி பேசவுள்ளார்,
முன்னதாக இன்று காலை விழுப்புரம் சென்ற கருணாநிதிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது விழுப்புரம் மாவட்ட தேர்தல் ஆயத்த மாநாடு என்ற போதிலும், தமிழக பா.ஜ.க.வுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரிய திமுக நிகழ்ச்சி என்பதால் இந்த மாநாடு, தமிழகத்தின் ஒட்டு மொத்தகவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாநாட்டுப் பந்தல் சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகதலைவர் கருணாநிதி மேடை வரை காரிலேயே வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்அவர் மேடை ஏற சாய்வான பாதையும் அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications