ஆற்றில் மணல் அள்ள தனியாருக்கு தரப்பட்ட காண்ட்ராக்ட் ரத்து: இனிமேல் அரசே மணல் விற்கும்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் ஆற்றுப் பகுதிகளில் மணல் எடுப்பதற்கு தனியாருக்கு கொடுக்கப்பட்டிருந்த குத்தகையைஅரசு ரத்து செய்துள்ளது. இனிமேல் அரசே மணல் எடுத்து பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும்.
தமிழகம் முழுவதிலும் ஆற்று மணலை திருடுவது அதிகரித்து விட்டது. காண்ட்ராக்டர்களும் அந்தந்தப் பகுதிஅரசியல்வாதிகளும் மணல் எடுக்க குத்தகை எடுத்துவிட்டு, அளவுக்கு மீறி மணலைத் திருடி வருகின்றனர்.
இதனால் பல ஆற்றுப் படுகைகளில் மணலே இல்லாமல் பாறைகள் எட்டிப் பார்க்கின்றன. மணல் திருட்டைத்தடுக்கும் சில அதிகாரிகளுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
சமீப காலங்களில் மட்டும் 2 அதிகாரிகள் மணல் லாரிகளை ஏற்றி கொல்லப்பட்டுள்ளனர். ஆற்றுப் பகுதிகளில் மிகஅதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது.
இதைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் மணல் எடுத்து விற்பனை செய்வதற்காக தனியாருக்குகொடுக்கப்பட்டிருந்த குத்தகையை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இனிமேல் புறம்போக்கு, பட்டா நிலங்கள்மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அரசே மணல் எடுத்து அதை பொது மக்களுக்கு விற்பனை செய்யும்.
இதற்காக சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், 239 இடங்களில் மணல் அள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 95இடங்களில் மணலை சேமித்து வைத்து விற்பனை செய்யவும் அரசு முடிவெடுத்துள்ளது.
ஒரு லாரி மணல் ரூ. 1000க்கு விற்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை ஒரு லாரி மணலை தனியார் கும்பல் ரூ.4,000க்கு விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றிற்கு மணல் தேவைப்படுவோர் இனிமேல் அரசின் மணல் மையங்களை அணுகிதங்களுக்குத் தேவையான மணலைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மணல் அள்ளுவது மற்றும் மணல் விற்பனைப் பணியை பொதுப் பணித்துறை மேற்கொள்ளும்.