மது கடைகள், மணல் குவாரிகள் மீதான வழக்குகளில் நாளை தீர்ப்பு
சென்னை:
மதுக் கடைகள், மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்புவழங்கப்படவுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தனியார் மணல் குவாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது.அரசே இனிமேல் மணல் அள்ளும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் குவாரி உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு உத்தரவுக்குத் தடை விதித்து நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார். ஆனால் அரசுஉடனடியாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதேபோல, தனியார் மதுக் கடைகளை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து மதுக் கடை உரிமையாளர்கள் சார்பில்உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளனர். தற்போதுநீதிபதிகளின் உத்தரவுப்படி 879 தனியார் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.