குடியாத்தம் அருகே கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
சென்னை:
டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் குடியாத்தம் அருகே தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் காயமடைந்தார். இதனால் ஜோலார்பேட்டை-காட்பாடி வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலின் பிரேக் வேன் பெட்டியில் (ரயிலுக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்படும் பெட்டி) தீப் பிடித்துக் கொண்டது. இந்தத் தீ அடுத்திருந்த பயணிகளின் பெட்டிக்கும் பரவியது.
இதைக் கண்டு, தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர். அவரச சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் அவசரமாக ரயிலில் இருந்து வெளியேறினர்.
இந்த நெரிசலில் ஸ்ரீஜா (24) என்ற பெண் காயமடைந்தார். அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் காட்பாடி, வேலூர், குடியாத்தத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. பல மணி நேரம் தாமதத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இந்த விபத்தால், மிக அதிகமான ரயில் போக்குவரத்து நிறைந்த காட்பாடி-ஜோலார்பேட்டை வழித் தடத்தில் 4 மணி நேரம் பல ரயில்களும் நிறுத்தப்பட்டன.
சேரன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரயில்கள் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன.