நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சதாம்
பாக்தாத்:
இராக் இடைக்கால நிர்வாக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அந் நாட்டு முன்னாள் அதிபர் சதாம் ஹூசேன் இன்று ரகசிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இராக் நிர்வாகத்தை இடைக்கால அரசிடம் ஒப்படைத்தது அமெரிக்கா. இந் நிலையில் இன்று அடையாளம் தெரியாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் சதாம் ஆஜர்படுத்தப்பட்டார்.
உடல் மெலிந்து போய் காணப்பட்ட சதாம், மிகவும் களைப்புடன் இருந்தார்.
நீதிபதிகள் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் மீது 7 முக்கிய குற்றச்சாட்டுகள் படிக்கப்பட்டன. இதற்காக ஏன் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த சதாம்,
நான் தான் இப்போதும் இந் நாட்டின் அதிபர். என்னை விசாரிக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் நாடகம் நடத்துகிறீர்கள். உண்மையான கிரிமினல் ஜார்ஜ் புஷ் தான் என்றார்.
மேலும் குவைத் மீது படையெடுத்தது சரி தான் என்ற, சதாம் நீதிபதிகள் காட்டிய காகிதங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
சுமார் 30 நிமிடங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சதாம் மீண்டும் ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தத் தகவல்களை இடைக்கால நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீதிமன்றம் எங்குள்ளது, நீதிபதிகள் யார்?, சதாமுக்காக வழக்கறிஞர்கள் யாராவது ஆஜராகிறார்களா என்ற விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சியை அமெரிக்க ராணுவத்தினர் மட்டுமே வீடியோ எடுத்தனர். அதை அவர்கள் எடிட் செய்து பின்னர் டிவி நிலையங்களுக்கு வழங்கவுள்ளனர்












Click it and Unblock the Notifications