25,000 விநாயகர் சிலைகள்: ராமகோபாலன்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,001 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணிஅமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,001 இடங்களிலும், தமிழகம்முழுவதும் 25,000 இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.
விழா கொண்டாட்ட நாட்களில் சமுதாய எழுச்சி தினம், சமுதாய ஒற்றுமை தினம், இந்து அன்னையர் தினம், இந்துசிறுவர் -சிறுமியர் தினம், சுயவழிபாட்டு தினம், திருவீதி உலா என ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகளும், சமயநிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெறும்.
மத மாற்றத்தை மக்கள் சக்தி தடுக்கும் என்பதை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் அமையும்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே கலவர திருவிழாவாக ஒரு சிலர் சித்தரிக்கிறார்கள். இது திட்டமிட்ட சதியாகும்.ஆனால் திருவிழாக்களின்போது வன்முறைக்கு இந்துக்கள் ஒரு போதும் காரணமாக இருந்ததில்லை;இருக்கப்போவதும் இல்லை என்று கூறியுள்ளார்.