இலங்கையின் கைக் கூலிகள்: எல்.ஜி. பாய்ச்சல்
தஞ்சாவூர்:
மதிமுக அவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்பேசிய பேச்சு, மீனவர்களையும், சுற்றுச்சூழல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதையடுத்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் விளக்கக் கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான எல்.கணேசனும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்களும், மீனவர் பிரதிநிதிகளும், இத் திட்டத்தால் கடலோரச் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சந்தேகங்களைக் கிளப்பினர்.
அப்போது குறுக்கிட்ட எல்.கணேசன் மிகவும் ஆவேசமாக, சேது சமுத்திரத் திட்டத்தை யார் நிறைவேற்றியது என்பது குறித்து அரசியல்கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அரசோ இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
எனவே இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக் கூலிகளாகத்தான் இருக்க முடியும் என்றார்.
எல்.கணேசனின் பேச்சு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சால் கோபமடைந்த மீனவர்களும், சுற்றுச்சூழல்அமைப்பைச் சேர்ந்தவர்களும் எழுந்து நின்று கண்டனக் குரல் எழுப்பினர்.
இதனால் அங்கு சுமார் கால்மணி நேரம் பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் கூட்டாக வெளிநடப்பும் செய்தனர்.
பின்னர் தொடர்ந்து கூட்டம் நடந்தது. கூட்டத்தின் இறுதியில் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் ரகுபதி பேசுகையில்,மீனவர்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கவலைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications