தேர்தல் வன்முறை: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சென்னை மாநகராட்சி 7-வது வார்டு தேர்தலின்போது நடந்த வன்முறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 7-வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
7-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் அண்மையில் நடந்த தேர்தல்களில் எல்லாம் வன்முறை நடந்துள்ளது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ளவாக்கு போடுதல், ஆள் மாறாட்டம், வாக்காளர்களை மிரட்டுதல் போன்றவைநடந்துள்ளன.
அதேபோல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வன்முறை ஏற்பட்டது. திமுக தேர்தல்ஏஜென்டுகளை விரட்டிவிட்டு, அதிமுகவினர் கள்ளவாக்கு போட்டனர். அதிமுகவைச் சேர்ந்த பாலகங்கா,சேகர்பாபு, வெற்றிவேல் ஆகியோர் வன்முறையைத் தூண்டி விட்டனர்.
திமுக வேட்பாளரான என்னை வாக்குச் சாவடிக்குள் நுழையவிடாமல் அதிமுகவினர் விரட்டியடித்தனர். வன்முறைகாரணமாக வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. இதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர்.
எனவே, தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். 27-ம் தேதி நடந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு7-வது வார்டில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, தேர்தல் வன்முறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும்,பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் நீதிபதி முருகேசனிடம் காட்டினார்.
இதனையடுத்து நீதிபதி முருகேசன், அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சோமயாஜிடம், இங்குஎன்ன நடக்கிறது. நேற்று நடந்தது நியாயமான தேர்தலா? அல்லது அவரவர் விருப்பப்படி நடந்த தேர்தலா? என்றுகேட்டார்.
பின்பு, தேர்தல் முடிவு வெளியாகிவிட்டதால் அதை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைஏற்க முடியாது என்று நீதிபதி கூறினார்.
மறு தேர்தல் நடத்தக் கோரும் மனுவுக்கு அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உள்துறைச் செயலாளர், மாநிலத் தேர்தல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.