தொடர் மழையால் குறுவை விவசாயிகள் கவலை
தஞ்சாவூர்:
மழையே இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் சோகத்தில் தவித்து வந்த காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு பெய்து வரும் தொடர் மழையால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், கர்நாடகம் உரிய நீரைக் காவிரியிலிருந்து விடுவிக்கமறுத்ததாலும், தமிழக காவிரி பாசனப் பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த முறை கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும்,தமிழக காவிரிப் பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், குறுவை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில்மூழ்கியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் குறுவைபயிரிட்டுள்ளோம். அறுவடைக்கு பயிர்கள் தயாராகி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் பயிர்கள்சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்கள்.
மொத்தம் 50,000 ஹெக்டேர்களில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 24,136 ஹெக்டேர்கள்,திருவாரூரில் 9,261 ஹெக்டேர்கள், நாகப்பட்டனம் 21,200 ஹெக்டேர்களில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது.
இவர்களில் நாகப்பட்டனம் மாவட்ட விவசாயிகள் அறுவடையை ஆரம்பித்து முடித்து விட்டனர். மாட்டிக்கொண்டிருப்பது தஞ்சை, திருவாரூர் பகுதி விவசாயிகள்தான்.
இந்தப் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் மையங்கள் உடனடியாகத் திறந்தால் பாதிப்பிலிருந்து ஓரளவு மீளமுடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications