சென்சார் போர்டும் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தும்..
டெல்லி:
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நடிகர் அனுபம் கெர் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக நடிகை சர்மிளா தாகூரை அப் பதவியில் மத்திய அரசு அதிரடியாக நியமித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்பந்தம் காரணமாகவே தன்னை அரசு நீக்கியுள்ளதாக கெர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியில் அனுபம் கெருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஅரசு பதவியேற்றபின், சென்சார் போர்டு தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அனுபம் கெர் கேட்டுக்கொள்ளப்பட்டார். பதவியிலிருந்து விலக அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில், அவரை நீக்கிவிட்டு சர்மிளா தாகூரை நியமனம் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைஅமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே தன்னை ஆர்.எஸ்.எஸ். அபிமானி என்று குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அனுபர் கெர்.
தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை சுர்ஜித் 48 மணி நேரத்தில் திரும்பப் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.