மீனம்பாக்கத்தில் ஏர்-டெக்கன் விமான அலுவலகம் சூறை!
சென்னை:
சென்னை-டெல்லி இடையிலான ஏர்-டெக்கன் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், மீனம்பாக்கம் விமானநிலையத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் டிக்கெட் கெளண்டர் சூறையாடப்பட்டது, கண்ணாடிகள் உடைத்துநொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை என்ற பெயரில் இந்த நிறுவனம் நாடு முழுவதும் விமானங்களை இயக்கிவருகிறது. ஆனால், பல நேரங்களில் இதன் விமானங்களில் கோளாறு, அவசரமாக தரையிறங்குவது என பலபுகார்கள் இருந்து வருகின்றன.
முன் கூட்டியே பதிவு செய்தால் சென்னையில் இருந்து டெல்லிக்கு வெறும் ரூ. 500 கட்டணத்தில் அழைத்துச்செல்கிறது இந்த விமான நிறுவனம்.
இந் நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு ஏர்-டெக்கன் விமானம் சென்னையில் இருந்து ஹைதராபாத் வழியாகடெல்லி புறப்பட இருந்தது. இதில் செல்ல 140 பயணிகள் காத்திருந்தனர். இவர்களில் 5 பேர் ரூ. 500 கட்டணத்தில்டெல்லி செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர்.
ஆனால், காலை 7 மணி வரை இந்த விமானம் கிளம்பவில்லை. அதுவரை ஏர்-டெக்கன் நிறுவனம் எந்தக் காரணமும்சொல்லவில்லை. 7 மணிக்கு மேல் பொறுமை இழந்த பயணிகள் ஏர் டெக்கன் ஊழியர்களை தொடர்புகொண்டபோது, சில காரணங்களால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏர்டெக்கன் ஊழியர்கள் திமிர்த்தனமாக பதில்சொல்லவே, கடுப்பான பயணிகள் டிக்கெட் கெளண்டரின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
டிக்கெட் கெளண்டரில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து போலீசாரும் விமான நிலையஅதிகாரிகளும் ஓடி வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர்.
இதே டிக்கெட்டில் நாளை டெல்லிக்கு இந்தப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஏர் டெக்கன் நிறுவனஅதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
ஆனால், நேற்றும் இதே விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.