ஆளுநர் மாற்றத்திற்கு கருணாநிதியே காரணம்: பாஜக
சென்னை:
ஆளுநர் மாற்றத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஆளுநர் விஷயத்தில் கருணாநிதி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்து தேவையற்ற ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறார். முன்னாள் ஆளுநர் ராம்மோகன் ராவ் பொதுமக்களிடம் நெருங்கி பழகி மிக நல்ல ஆளுநர் என்று பெயர்பெற்றவர்.
அவரை மாற்றியதற்கு அரசியல் உள்நோக்கமே முழு காரணம். தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்புகொடுக்காமல் செய்வதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்து திமுக இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுஜனநாயகத்துக்கு பொருந்தாது.
ஆளுநர் பர்னாலா நல்லவர்தான் என்றாலும், தேவையில்லாமல் அவரை இப்போது மாற்ற வேண்டியது இல்லை என்பதுபாஜகவின் கருத்து.
முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் பேசியதை உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டதில் எந்ததவறும் இல்லை. தமிழக மக்களுக்கு எது தெரிவிக்கப்படவேண்டுமோ அதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
மனித உரிமை அமைப்புகள் வீரப்பன் போன்ற சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்குவது வருத்தத்துக்கு உரியது.
வறட்சி நிவாரண நிதியாக தமிழகம் கேட்ட தொகையில் 9 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் 12 மத்தியஅமைச்சர்கள் தஞ்சை விவசாயிகளுக்காக கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்தார்.
ஷிண்டே பதவியேற்பு:
இந் நிலையில் ஆந்திர ஆளுநராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுசில்குமார் ஷிண்டே இன்று பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications