ஜெயேந்திரர்: திமுகவுக்கு மார்க். கம்யூ கோரிக்கை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் திமுக தெரிவித்து வரும் கருத்துக்கள் வழக்கை திசை திருப்ப முயல்பவர்களுக்கு உதவிடக் கூடாதுஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சங்கரராமன் கொலை வழக்கு பற்றிய விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடந்து வருகிறது.
ஜெயேந்திரர் கைது மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் காவல்துறையினரால் ஒருதலைப்பட்சமான பல நடவடிக்கைகளுக்கு ஆளானகட்சி. இதனால் தான் காவல்துறையை கடுமையாகவே விமர்சித்து வருகிறது எங்கள் கட்சி.
ஆனால், சங்கரராமன் கொலை வழக்கில் முதல்வர் கொடுத்துள்ள விளக்கங்களும், போலீசாரின் நடவடிக்கைகளையும் கணக்கில்கொண்டால், இந்த வழக்கு விசாரணை சரியான முறையிலேயே நடப்பதாகத் தெரிய வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் வழக்கிற்கான முகாந்திரங்கள் இருப்பதாக நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ.க, வி.எச்.பி, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் அணுகுமுறை அரசியல்சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மறுக்கும் வகையில் உள்ளது.
உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மதமோதல்களை உருவாக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கைதுக்குகம்யூனிஸ்ட்டுகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டும் அளவுக்கு பொறுப்பில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதைக் கண்டித்து வரும் 25ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டாங்கள்நடத்தப்படவுள்ளது.
இந்த வழக்கு சட்டரீதியான முறையிலும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும்.
திமுக போன்ற ஜனநாயக இயக்கங்கள் இந்த வழக்கு குறித்துத் தெரிவிக்கும் கருத்துக்கள் வழக்கை திசை திருப்பவரும்புபவர்களுக்கு உதவிடக் கூடாது.
இவ்வாறு வரதராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.