வீரப்பன்: ஜெவுக்கு எதிரான மனு தள்ளுபடி
டெல்லி:
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப் படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகளை அள்ளிக் கொடுத்ததை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப் படையினர் 752 பேருக்கும் ரூ.50 கோடி மதிப்பில் வீட்டு மனை, ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை ஜெயலலிதா வழங்கினார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்தார்.அந்த மனுவில், அரசு பதவியில் இருப்பவர்களுக்கு இத்தகைய பரிசுப் பொருட்களை ஒரு சட்டம் இயற்றி அதன் மூலமே வழங்க முடியும்.
வெறுமனே உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் பரிசுகள் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவது அரசியமைப்பு விதிகளுக்கு முரணானது.எனவே அதிரடிப்படையினருக்கு பரிசுகள் வழங்கியதை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சபர்வால் மற்றும் நெளலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர் கூறிய விவரங்கள் யாவும்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவையாகும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.