தலித் சவ ஊர்வலத்தில் பதற்றம்
தஞ்சாவூர்:
தலித் பெண்ணின் சவ ஊர்வலம் தங்களது தெரு வழியாக போகக் கூடாது என்று கூறி இரு முக்கிய ஜாதியினர் தடை போட்டதால்கபிஸ்தலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் (ஜி.கே. மூப்பனார் பிறந்த ஊர்) அருகே தேவங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித்பெண் ராணி என்பவர் இறந்து விட்டார்.
அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அந்தப் பெண்ணின் உறவினர்கள் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது சவஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக செல்லக் கூடாது என்று கூறி இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடை போட்டனர்.
இதனால் தலித் சமுதாயத்தினர் கொந்தளித்தனர். ராணியின் உடலுடன் முக்கிய சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாபநாசம் தாசில்தார், கும்பகோணம் ஆர்டிஓ உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தைநடத்தினர்.
கடந்த மாதம் இதேபோல தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்ல இதேஜாதிக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பிரச்சினை உருவானது. பின்னர் போலீஸார் தலையிட்டு நிலைமையை சரி செய்தனர்.தற்போது மீண்டும் அதே பகுதியில் பிரச்சினை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு எங்கெங்கோ போய்க் கொண்டுள்ளது. ஆனால் ஜாதிப் பேரை சொல்லிக் கொண்டு ஒரு சவ ஊர்வலத்திற்கு சில ஜாதி வெறிக்கும்பல்கள் தடை போடுவது வேதனையாக உள்ளது.