சென்னையில் பிரதமர்: ஜெ, கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் சுனாமி அலைகள் தாக்கிய கன்னியாகுமரி, நாகை மாவட்டப் பகுதிகளை மன்மோகன் சிங் ஏற்கனவே பார்வையிட்டார். இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தார்.
மும்பையிலிருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுனர் பர்னாலா, முதல்வர்ஜெயலலிதா, அமைச்சர்கள், டிஜிபி கோவிந்த், சென்னை மாநகர ஆணையர் நடராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சிங், அங்கு ஜெயலலிதாவுடனும், பல்வேறு உயர் அதிகாரிகளுடனும் மன்மோகன் சிங்ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் அம் மாநில சுனாமி சேதம் குறித்து விவாதிக்கிறார்.
பின்பு திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்குச் செல்லும் மன்மோகன் சிங், அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார்.
இன்றிரவு ராஜ்பவனில் தங்கிவிட்டு, நாளை காலை 7 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர்.