ஜெயலட்சுமி: ஓ.பி. பதவி விலகுவாரா?- ராஜா கேள்வி
சென்னை:
சட்டசபையில் காவல் துறையினர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர்.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திலான விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் எச்.ராஜாபேசினார்.
அவர் கூறியதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.100 கோடியில் அமிர்தானந்தமயி மடம் வீடுகள் கட்டித் தருகிறது. அதேபோல் ராமகிருஷ்ணமடம், மேல்மருவத்தூர் மடம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வீடுகள் கட்டித் தர முன் வந்துள்ளன.
மத்திய அரசின் சுனாமி நிவாரண திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் எதிர்க்கிறோம்.
வீராணம் விரிவாக்கத் திட்டத்தால் கடலூர் பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு நேற்றே விளக்கம் தரப்பட்டு விட்டது என்றார்.
அப்போது சபாநாயகர் காளிமுத்து, ராஜா எப்போதும் அமைச்சர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு ராஜா, நான் அதிகாரம் இல்லாத ராஜா என்பதால் கேட்க வேண்டியிருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய ராஜா, காவிரி பிரச்சினை தீர்ந்தால்தான் வீராணம் பிரச்சினை தீரும். காவல்துறைக்கு ஆளுநர் உரையில் பாராட்டும்,வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி ஜெயலட்சுமி என்ற பெண்மணி, 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் முறைகேடு,நிதி முறைகேடு என சரமாரியாக புகார்களைத் தொடுத்துள்ளார்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. வீட்டில் வைத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கொலைசெய்யப்படுகிறார். சங்கரராமன் மனைவிக்கு ரூ.5 லட்சம் வழங்கியதுபோல் கொலையான எம்.எல்.ஏ. குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம்கொடுத்திருக்க வேண்டும்... என்று ராஜா பேச்சைத் தொடர்ந்தபோது, சபாநாயகர் காளிமுத்து குறுக்கிட்டு, அடுத்த உறுப்பினரைப் பேசஅழைத்தார்.
இதனால் கோபற்ற ராஜா, தன்னைத் தொடர்ந்து பேச அனுமதிக்குமாறும், சங்கரராமன் கொலை வழக்கு குறித்து பேச அனுமதிக்க வேண்டும்என்றும் கோரினார். ஆனால் காளிமுத்து அதை அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
வெளியே வந்த ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கு குறித்து நான் பேச விரும்பினேன். ஆனால் அதைசபாநாயகர் அனுமதிக்கவில்லை. அரசு எதையோ மறைக்க விரும்புவதையே இது காட்டுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பது தவறு. ஜெயலட்சுமி வழக்கில் 83 போலீஸார்மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதவிவிலக வேண்டும்.
தமிழக அரசு ஒரு இந்துவிரோத அரசு. எங்களுக்கு சபையில் பேச அனுமதி மறுக்கப்படலாம். ஆனால் வீதி விதியாகச் சென்று மக்களிடம்இதை சொல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications