காரணம் தேடும் ஜெ: ராமதாஸ் கிண்டல்
சென்னை:
ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டுவதற்காகத் தான் மக்களவைத் தேர்தலில் குளறுபடி நடந்ததாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தலில் தோற்பவர்கள் காரணம் தேடி அலைவது வாடிக்கைதான். ஆனால் ஜெயலலிதா அதிலும் எல்லை மீறி 39 தொகுதிகளிலும் மோசடி நடந்துவிட்டதாகக் கூறி, மறு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறாராம்.
தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த அதிகாரிகள் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டார்களாம். அவரது நிர்வாகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மீதே இவ்வாறு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு இந்திய ஆட்சிப் பணியில் உள்ள ஐஏஎஸ் வர்க்கத்திற்கு எதிரான பகிரங்க போர் என்றே கருதப்படும். தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆன நிலையில், அடுத்து சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், வரும் தேர்தலில் ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டத்தான்.
முதல்வரின் இந்த மறைமுக மிரட்டல், ஐஏஎஸ் அதிகாரிகள் முறையாக செயல்பட இடையூறுகளை ஏற்படுத்தி விடக்கூடும். இதனை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மாநில அரசுக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும்.
தி அதிமுக ஆட்சியில் மாதாமாதம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். சிலர் மட்டும் அதே மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதற்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.
தேர்தல் முடிந்து 7 மாதங்களுக்குப் பிறகு ஒட்டு மொத்தமாக தேர்தலை ரத்து செய்ய முடியுமா? சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவ்வாறு கோரி வழக்கு தொடரலாம் என்றாலும், இதில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும்?
முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களைக் குழப்பி திசை திருப்பவும், தோல்வியால் துவண்டு போயிருக்கும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பை கொச்சைப்படுத்தும் இத்தகைய புகார்களால் அவர்களைத் திசை திருப்ப முடியாது. அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பதில் அவர்கள் இன்னும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications