இராக்: ஐநா அதிகாரிகள் பெரும் ஊழல்
நியூயார்க்:
இராக்கில் எண்ணெய்க்கு உணவுப் பொருள் வழங்கும் ஐ.நா. திட்டத்திற்குத் தலைவராக இருந்த பெனோன் செவன் பெருமளவில்ஊழலில் ஈடுபட்டது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு வளைகுடா போருக்குப் பின் ஐ.நா. மேற்பார்வையில் இராக் பெட்ரோலியப் பொருட்களை விற்கவும் அதற்குப்பதிலாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 1996 முதல் 2003ம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்தது. யாருக்கு பெட்ரோலியப் பொருட்களை விற்பது என்பதை முடிவு செய்ய இராக்அனுமதிக்கப்பட்டது.
இந்த ஐ.நா திட்டத்திற்குத் தலைவராக பெனோன் செவன் இருந்தார். அப்போது அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தி பெருமளவில் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அரசு வங்கியின் தலைவர் பால் வாக்கர் தலைமையில் நடந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையில் (219பக்கங்கள்) இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் வாக்கர் கூறியதாவது:
பனாமா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று பெட்ரோலியப் பொருட்களை வாங்க செவன் தனது பதவியைப் பயன்படுத்தியுள்ளார்.இதற்காக அவர் பணம் வாங்கியுள்ளார்.
செவனின் உதவியுடன் அந்த நிறுவனம் 7.3 மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியுள்ளது. அதன் மூலம் 1.5 மில்லியன் டாலர்அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது.
செவனின் இந்த முறைகேடான நடவடிக்கைகள் ஐ.நா. சபையின் பெருமையை நிச்சயம் குலைப்பதாகும். இது இடைக்காலஅறிக்கையே. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.
செவன் 1,60,000 டாலர் அளவுக்கு லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இடைக்கால அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தான் முறைகேடாக எதையும் செய்யவில்லை என்றும், அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பணம்தனது சொந்த நாடான சைப்ரஸில் இருந்து தனது அத்தை அனுப்பியது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவரது அத்தைக்கு சுமாரான அளவே பென்ஷன் பணம் வருவதாகவும், அவரது எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் என்றும் வாக்கரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோபி அன்னான் நடவடிக்கை:
இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செவன் மற்றும் இன்னொரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஜா.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா. அலுவலக தலைமை அதிகாரி மார்க் மல்லோக் பிரெளன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஊழல் உலக மக்களிடம் ஐ.நா. குறித்த தவறான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கோபி அன்னான் கூறினார். பால்வாக்கரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செவன் மற்றும் ஜோசப் ஸ்டெபானிடிஸ் என்ற அதிகாரி மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றுகூறினார்.