வாக்காளர் பட்டியல்: கலெக்டர்களுக்கு உத்தரவு
சென்னை:
மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விளக்கம் அனுப்புமாறு தேர்தல் அதிகாரிகள்,உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக்கண்காணிப்பில் நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது. திருவள்ளுவர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெருவாய், புதுவாயல் கிராமங்களில் மாவட்டஆட்சியர் குமார் ஜெயந்த் மேற்பார்வையில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
குமார் ஜெயந்த் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மேற்பார்வையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இந்தப் பணி அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.