ஹைதராபாத் ஓபன்: சானியா சாம்பியன்!
ஹைதராபாத்:
ஹைதரபாத் ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, உக்ரைனின் அல் யோனாவை தோற்கடித்தார். இதன்மூலம் டபிள்யூ. டி.ஏ. டென்னிஸில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா படைத்தார்.
காலில் காயத்துடன் இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கிய சானியா, வரிசையாக வெற்றிகளைக் குவித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இறுதிப் போட்டியில் அல் யோனாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அல் யோனாவை வீழ்த்திய சானியா, ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார்.
இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும்படைத்தார். சானியாவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சாம்பியன் பட்டம் வழங்கினார். சானியாவுக்கு ரூ.10 லட்சம் பரிசுகிடைத்தது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்துதெரிவித்தனர்.
கலாம் தனது வாழ்த்துச்செய்தியில்,
இந்தியர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சானியா வருங்காலத்தில் சிறந்த வீராங்கனையாகத்திகழ்வார் என்று நான் நம்புகின்றேன். இவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீன வீராங்கனைகளான ஜி யான், ஜீ ஜாங் ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டுகளில்தனது சக நாட்டவர்களான டிங் லீ, டியான் சன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.