குவியும் சுற்றுலா பயணிகள்: மீண்டும் களை கட்டுகிறது கன்னியாகுமரி!
கன்னியாகுமரி:
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேற்று தான் கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி தாக்குதலினால் சிதிலமடைந்த பகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்று. சுனாமி பீதி காரணமாககன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அடியோடு குறைந்து போய் விட்டது.
மேலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் 2 படகுகளும் நிறுத்தப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் குறைந்து போய்வெறிச்சோடியது குமரி.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் 2 படகுகளும் சரி செய்யப்பட்டு மீண்டும் தங்களது பணியை தொடங்கின. இதைத் தொடர்ந்துசுற்றுலாப் பயணிகள் வருகை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
சில நாட்களுக்கு முன் மீண்டும் சுனாமி பீதி பரவினாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தே வந்தது. இந் நிலையில் நேற்றுஇதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வருகை தந்தனர்.
வெளிநாட்டுப் பயணிகள் உள்பட ஏராளமான அளவு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குமரியில் குவிந்தனர். இதனால் ஊரே களைகட்டியது. ஏராளமான சுற்றுலாப் பேருந்துகள், வேன்கள் குமரி கடற்கரையை நிறைத்தன.
இதே நிலை நீடித்தால் கன்னியாகுமரி மிக விரைவிலேயே மீண்டும் தனது பழைய பொலிவைப் பெற்றுவிடும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.












Click it and Unblock the Notifications