இந்தியா-பாக் கிரிக்கெட் ஒளிபரப்பு: சிக்கல் நீங்கியது
சென்னை:
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.
வரும் 2008-ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப ஜீ டி.வி. நிறுவனத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில் அந்த அனுமதியை கிரிக்கெட் வாரியம் திடீரென ரத்து செய்துவிட்டு ஈஎஸ்பிஎன் டிவிக்கு ஒளிபரப்பு உரிமத்தை வழங்கியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜீ டி.வி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியை யார் ஒளிபரப்புவது என்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் போட்டிகளே ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஜீ டி.வியின் வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவ சுப்பிரமணியம், போட்டியை ஒளிபரப்பும் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் தர இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் இந்தப் போட்டியை ஒளிபரப்புவதால் பிரசார் பாரதிக்கு கிடைக்கும் லாபம் குறித்த வரவு, செலவு கணக்குகளை பிசிசிஐ பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ். கே. நாயர் வரவேற்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் அவர் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சியை தருகிறது. உடனடியாக கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவதற்கு கிரிக்கெட் வாரியம் எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications