விடுதலைப் புலிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
ரோட்டரி அமைப்பின் சார்பில் ஜெயலலிதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய மாநாட்டு அரங்கில் நடந்த புதன்கிழமை இந்த விழாவில் ரோட்டரி சர்வதேச மாவட்ட ஆளுனர் பெஞ்சமின் செயன் விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
சென்னை பெருநகர வளர்ச்சிக்காக ரூ. 18,000 கோடியில் பத்தாண்டுத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற இந்தத் திட்டம் பேருதவி புரியும்.
குடிநீர், மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்தத் திட்டத்தில் வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர மக்களே பங்கேற்கும் வகையில் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, சாலை நடுவில் பூங்காக்கள் அமைப்பது, போக்குவரத்து சீரமைப்பு, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவை மக்களின் ழுமையான பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்டு வரும் நல்ல செயல்களை அங்கீகரிப்பதாகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.