கோவை சிறையில் வார்டன்கள்- கைதிகள் மோதல்: செல்போன்கள் பறிமுதல்
கோவை:
கோவை சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த செல்போன்கள், ஆயுதங்கள் மற்றும் ஏராளமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்போது கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அவ்வப்போது அதிகாரிகள் சோதனையிட்டு செல்போன்கள் உட்பட பல பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பு வழக்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள செல்களில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சுவிட்ச் பாக்ஸ்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், சார்ஜர்கள், எப்.எம். ரேடியோ, வயர்கள், அடாப்டர்கள், பிளேடுகள், ஸ்குரு டிரைவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த சில கைதிகள், வார்டன்களான மதிவாணன், சடையன் ஆகியோரின் சட்டையைப் பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வார்டன்களைத் தாக்கிய கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.சிறைக்குள் செல்போன்கள் ஊடுருவியதில் சிறைக் காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாகவே தெரிகிறது. சிறைக் காவலர்களுக்கு பணம் தந்துவிட்டு இந்தப் பொருட்களை கைதிகள் உள்ளே வரச் செய்துள்ளனர்.