ரவியை மிரட்டினோமா?: சிபிஐ விசாரிக்க சங்கர மட வழக்கறிஞர் கோரிக்கை
சென்னை:
ரவி சுப்பிரமணியத்தை வழக்கறிஞர்கள் மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சங்கர மடத்தின் வழக்கறிஞர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்தை சிறைக்குச் சென்று மிரட்டியதாக மடத்தின் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீரா பானு ஆகியோர் மீது, ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நான்கு வழக்கறிஞர்களும் தற்போது முன் ஜாமீன் பெற்று, கைதாகாமல் தப்பியுள்ளனர்.
இந் நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி சிவசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதி, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலாளர், சிபிஐ, டிஜிபி, சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் கூடுதல் எஸ்.பி. சக்திவேல் அகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கை தமிழக போலீஸார் விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சண்முகம் கோரினார்.
ஆனால், அக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.