இன்ஸ்பெக்டரின் கேலி: மாணவி தற்கொலைக்கு முயற்சி
திருநெல்வேலி:
தான் அணிந்திருந்த உடை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கேலிசெய்ததால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரியா. கல்லூரி மாணவியான இவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும்சங்கரப்பாண்டி என்பவர் கையைப் பிடித்து இழுத்து ஈவ் டீசிங் செய்துள்ளார்.
இதுகுறித்து மரிய பிரியா நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சங்கரப்பாண்டியை போலீஸார்கைது செய்தனர்.
மறுநாள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மரிய பிரியாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார் இன்ஸ்பெக்டர்சுந்தரராஜன். அப்போது பிரியா அணிந்திருந்த உடை குறித்து அவர் கிண்டல் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டுக்கு வந்து பூச்சி மருந்தைக் குடித்துள்ளார். வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்த பிரியாநெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.