சென்னையில் ரூ. 1 கோடி ஹவாலா பணம் சிக்கியது
சென்னை :
சென்னையில் ரூ 1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு ரூ. 1 கோடி ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டை போலீஸார் சோதனையிட்டனர்.
அந்த வீட்டில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. லாரியில் வைத்து இந்தப் பணத்தை கேரளாவுக்கு கடத்த அந்த வீட்டில் இருந்த கேரளாவைச்சேர்ந்த ஷாஜி, ஆஷிஷ் ஆகியோர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
ரூ. 1 கோடி பணம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தியவிசாரணையில் கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவுக்கு ரூ. 250 கோடி அளவுக்கு ஹவாலா பணத்தை கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களது கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைப் பிடிக்க கோவை மற்றும் கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.