கருணாநிதியின் பேனா சிலையை உடைப்பேன்னு சொன்னவருடன் கொஞ்சி குலாவல்! திருமாவளவனின் மறைமுக தாக்கு
திருவண்ணாமலை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என சொன்னவருடன் ஒரே நிகழ்ச்சியில் கொஞ்சி குலாவுகிறார்கள் என சீமானுடன் ஸ்டாலின் சிரித்து பேசியதை குறிப்பிட்ட விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த விசிக நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என சொன்னவரோடு ஒரே திருமண நிகழ்ச்சியில் சந்தித்து கொஞ்சி குலாவுகிறார்கள்.

கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என அறிவித்திருந்தால் விரும்பிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தந்திருந்தால் இத்தனை பெரிய பின்னடைவை திமுக சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை.
விசிகவினரின் ஆசையை பின்னுக்கு தள்ளி கூட்டணி கட்சி தலைவரின் உள்ளம் நோகக் கூடாது என்ற அடிப்படையில்தான் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்தேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக திமுகவை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு காரணம் விசிகவில் திருமாவளவனின் வலது கரமாக இருந்த பனையூர் பாபுவை திமுகவில் இணைத்ததுதான். பாபு திமுகவை அணுகியிருந்தாலும் அவரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா என திருமாவளவனே வேதனையோடு தருமபுரி கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
பனையூர் பாபு போனது அந்த அளவுக்கு திருமாவளவனுக்கு வலியை ஏற்படுத்தித் தந்தது. மேலும் பனையூர் பாபுவை திமுகவில் இணைத்துக் கொண்டதன் மூலம் விசிகவை பலவீனப்படுத்திவிடலாம் என நினைத்துவிட்டார்கள்.
என்னிடம் இருந்து போனது ஒரே ஒரு தம்பிதான், ஆனால் பத்திரிகைகளில், விசிக கூடாரம் காலி, பலம் குறைந்த விசிக என பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். விசிகவில் இருந்து விலகியது பாபு மட்டும்தான். மற்ற தம்பிகள் எல்லாம் என்னுடனே இருக்கிறார்கள் என்றும் திருமா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்டாலின் மீது சீமான் எத்தனையோ விமர்சனங்களை வைத்த போதும் ஸ்டாலினும் சீமானும் அந்த நிகழ்ச்சியில் சிரித்து பேசி அரசியல் நாகரீகத்தை கடைபிடித்தனர்.
அது போல்தான் திருவேற்காட்டில் திமுக நிர்வாகியின் திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சிக்கு சீமானும் வந்திருந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகின.
திமுகவினரும் சீமான் மீது அத்தனை விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். பெங்களூர் நடிகையை தனக்கு எதிராக திமுகவினர் ஒவ்வொரு தேர்தலின் போது திருப்பி விடுகிறார்கள் என்றெல்லாம் சீமான் குற்றம்சாட்டினார். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இருவரும் இருவரும் கைகுலுக்கி பேசியது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது, பலரை அதிர வைத்தது.
மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அவர் பேசுகையில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க வேண்டுமானால் உங்கள் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கடலில் கால் வைத்தால் அதை நான் வந்து உடைப்பேன். கடலில் பேனா சிலை வைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
மற்ற நலத்திட்டங்களுக்கு நிதி இல்லை, ஆனால் பேனா வைக்க மட்டும் நிதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். இதைத்தான் தற்போது திருமாவளவன் சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.















Click it and Unblock the Notifications