சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவுக்கே கைதா.. மீம்ஸை பகிர்ந்து திமுக பதிலடி
சென்னை: கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டிய ஒரு சாமானியக் குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது இந்த பாசிச தவெக அரசு. ஏன் இந்த நடுக்கம், சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டே உங்கள் ஆட்சி அதிகாரம் நடுநடுங்கிப் போய்விட்டதா? என்று கைதுக்கு காரணமான மீம்ஸை பதிவிட்டு திமுக ஐடிவிங்க் கேள்வி எழுப்பி உள்ளது.
திமுக ஐடிவிங்க் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவில் நிலங்களைச் சூறையாடிய கொள்ளையர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். அவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் மனிதர்கள் மீது சட்டத்தின் கரம் பாயவில்லை. அரசு விதிகளையும், அறநிலையத்துறைச் சொத்துகளையும் தாராளமாகத் தாரைவார்த்துப் பத்திரம் பதிவு செய்த பதிவாளர் மீது எந்த கைது நடவடிக்கையும் இல்லை. தன் துறையின் கீழ் நடக்கும் இமாலய ஊழல்களைக் கூடக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத, நிர்வாகத் திறனற்ற அமைச்சர் சொகுசாகத் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டிய ஒரு சாமானியக் குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது இந்த பாசிச தவெக அரசு.
ஏன் இந்த நடுக்கம், சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டே உங்கள் ஆட்சி அதிகாரம் நடுநடுங்கிப் போய்விட்டதா? ஒரு போஸ்ட்டைப் பார்த்தே இப்படித் தொடை நடுங்கிப் போய், அடக்குமுறையை ஏவி விடுவதுதான் நீங்கள் பேசும் ஜனநாயகமா? உங்கள் அரசை விமர்சித்தால், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் சிறைவாசம் தான் பரிசா?
ஆட்சியைத் திறம்பட நடத்தத் துப்பில்லை, ஆனால் விமர்சிப்பவர்களை வேட்டையாட மட்டும் காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தான் உங்கள் மாற்றமா.?
இந்த அவசரக் கைதுகள் காட்டுவது உங்கள் அதிகார பலத்தை அல்ல; உங்கள் பலவீனத்தையும், மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பயத்தையும்தான்.
கைது செய்வதிலும், வாய்பூட்டுப் போடுவதிலும் காட்டும் இந்த அசாத்திய ஆர்வத்தை, உருப்படியாக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள், அதைவிடுத்து, விமர்சிப்பவர்களின் குரல்வளையை நசுக்கப் பார்த்தால், மக்கள் மன்றம் உங்களுக்குப் பாடம் புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், உரிமைக் குரல் ஓயாது, தொடர்ந்து தவெக அரசின் ஊழல், லஞ்சம் நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருப்போம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை
பழனி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை இணைத்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கருத்துக்களை பரப்பினார்கள். இது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் உதவியாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவதூறு தகவல்களை பரப்பியது, 3 பேர் என்று தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் நேற்று இரவு வினோத் சூர்யகுமார் (வயது 33) என்பவரை க கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே வினோத் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக ஐடிவிங்க், அவர் வெளியிட்ட மீம்ஸை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு, இதுதவறா என்று கேட்டதுடன், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்று விமர்சித்துள்ளது.














Click it and Unblock the Notifications