அன்புள்ள அப்பா.. அப்பா! இரவோடு இரவாக அய்யாவை சந்தித்த சின்னய்யா! பரபரப்பான பாமக! என்னாச்சு?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை, அவரது மகனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்த பிறகு குடும்ப உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் முழு கண்ட்ரோலையும் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தான் முன்னர் வைத்திருந்தார். இந்த நிலையில் கட்சியின் எதிர்காலம் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன்னதாக அவர் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைக்கும் அதிகாரமும் அன்புமணி வசம் சென்றது. அதன்பின் அவரது ஆதரவாளர்கள் பாமகவில் எழுச்சி பெறத் தொடங்கினர்.
பாமக
இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ராமதாஸ் அன்புமணி இடையே வெளிப்படையாகவே மோதல் வெடித்தது. இதை அடுத்து தலைவர் பதவியை தான் எடுத்துக் கொள்வதாகவும் அன்புமணிக்கு வழங்கப்பட்டிருந்த செயல் தலைவர் பொறுப்பை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ். இந்த விவகாரம் பாமகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்புமணி ராமதாஸ்
அதே நேரத்தில் கட்சியின் தலைவர் நான்தான்.. நிர்வாகிகளை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் தனக்கு மட்டும்தான் இருக்கிறது எனக்கூறி பொது குழு செயற்குழுவையும் அன்புமணி நடத்தினார். நீதிமன்றம் வரை சென்றும் ராமதாஸுக்கு சாதகமான சூழல் அமையவில்லை. இதை அடுத்து 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக நான்கு எம்எல்ஏக்களை பெற்றது அதே நேரத்தில் சசிகலா தரப்பும் ராமதாஸ் உடன் கூட்டணி வைத்து போட்டியிடும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதற்கு இடையே செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டதும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமதாஸ்
அப்போதே அதற்கு எதிர்ப்பு குரல் எழுந்த போதும் ராமதாஸ் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி மீண்டும் இணைந்தனர். இரண்டு ஆண்டு மோதலுக்குப் பிறகு வெளிப்படையாக தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் சென்ற ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தந்தையை ஆரத் தழுவி கண்ணீர் மல்க சந்தித்து பேசினார். இரு வருடங்களாக தந்தை மகன் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், தந்தையின் திருமண நாளில் மோதல் போக்கும் முடிவிற்கு வந்தது.
பாமக ஆண்டு விழா
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாசை 2வது நாளாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் வருகின்ற 16ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் 38 வது ஆண்டு விழா கொண்டாடுவது, பாமகவின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்தனர். 45 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்தில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பாமகவின் நீண்ட கால கோரிக்கையான 10.5 இட ஒதுக்கீடு பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications