கிரிக்கெட்: இந்தியா வர விரும்பும் முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது.இந்தியா அழைத்தால் போட்டியைக் காண வரத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்சமாம் உல்ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே முதல்டெஸ்ட் போட்டி 8-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது.
கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர்களுக்கு பாகிஸ்தானில் சிறப்பு விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானிலிருந்து தனி ரெயில்விடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்போட்டியை பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்லாமாபாத்தில் அவர் கூறுகையில், எனக்கு பொதுவாக அனைத்து விளையாட்டுகளுமே பிடிக்கும்.அதிலும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்.
தற்போது நமது அணி இந்தியாவில் விளையாட சென்றுள்ளது. இப்போட்டியைக் காண எனக்கு ஆவலாகத்தான்உள்ளது. ஆனால் அழைப்பு இல்லாமல் எப்படி செல்வது ?
விளையாட்டை காண வரும்படி இந்தியா அழைத்தால் அதை பரிசீலிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
முஷாரப்பை போலவே பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் ஜியா உல் ஹக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்.இவர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.