ரிலையன்ஸ் தகராறு: அனில் வசம் இன்போகாம்?
டெல்லி:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் தம்பி அனில் அம்பானிக்கும்இடையே ஒப்பந்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தந்தை அம்பானியின் மறைவுக்குப் பின் இரு சகோதரர்களுமே ரிலையன்ஸ் குழுமத்தை இணைந்து நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் தவிர்த்த பிற துறைகளின் நிர்வாகத்தில் இருந்து அனிலை முகேஷ் நீக்கினார்.
இதையடுத்து அண்ணன்-தம்பி இடையே மோதல் மூண்டது. பல்லாயிரம் கோடியளவுக்கு சொத்துக்களை கொண்ட ரிலையன்சின்சொத்துக்களில் பாதியை தனக்குப் பிரித்துத் தர வேண்டும் என அனில் போர்க்கொடி தூக்கினார்.
இதை ஏற்க முதலில் மறுத்த முகேஷ் பின்னர் இறங்கி வந்தார். சொத்துப் பிரிப்பு குறித்த பணி குடும்ப நண்பரான ஐசிஐசிஐ வங்கித்தலைவர் காமத்திடம் இரு சகோதரர்களும் வழங்கினர்.
அவர் மொத்த சொத்துக்களைக் கணக்கிட்டு இரு சகோதரர்களுக்கும், தாயாருக்கும், இரு சகோதரிகளுக்கும் இடையே அதைப்பிரித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளார்.
அதன்படி ரிலையன்சின் தொலைபேசி, செல்போன் நிறுவனமான ரிலையன்ஸ் இன்போகாம் அனிலின் வசம் செல்லும்.
முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அண்ணன் முகேஷ் வசம் போகும்.
அனிலுக்கு இன்போகாம் தவிர மேலும் சில தொழில் பிரிவுகளும் கிடைக்கும் வகையில் சொத்துப் பிரிப்பை செய்துள்ளார் காமத்.
காமத்தின் இந்தப் பரிந்துரையை அனில் மற்றும் முகேஷின் சட்ட ஆலோசகர்களும், அதிகாரிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.