வேலை வாய்ப்பு அலுவலகங்களில் காத்திருக்கும் 1.2 கோடி பேர்
சென்னை:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருந்த போதிலும் போலீஸ் துறையைத் தவிர வேறு எந்ததுறைக்கும் ஆட்களை எடுப்பதில்லை என்ற முரண்பாடான முடிவுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது..
பகத் சிங் நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வேலை வாய்ப்பு கோரிபேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பகத் சிங்கின் உருவ அட்டையை முகத்தில் அணிந்திருந்தனர்.
சென்னையில் நடந்த பேரணியின் முடிவில் கருத்தரங்கமும் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மகேந்திரா தலைமையில் நடந்தஇந்த கருத்தரங்கில் அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் முத்து சுந்தரம், மாதர் சங்க மாநில செயலாளர் பேராசிரியை சந்திராஉட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் மகேந்திரன் எம்.எல்.ஏ., செயலாளர் திருவேட்டை ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 1.2 கோடிக்கும் மேல் படித்த இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர். ஆனால் தமிழக அரசு இவர்களுக்கு வேலை கொடுப்பதாக இல்லை.
அரசு போக்குவரத்துத்துறையில் சுமார் 60,000 இடங்களும், கல்வித்துறையில் 1,20,000 இடங்களும், மின்வாரியத் துறையில்60,000 இடங்களும், சுகாதாரத் துறை, அரசு நிர்வாகத்துறை உட்பட பல துறைகளில் காலியிடங்கள் உள்ளன.
ஆனால் இந்தத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆட்களை எடுக்காமல் போலீஸ் துறைக்கு மட்டும் ஆட்களைஎடுப்பது என்ற முரண்பாடான முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.