நடுக்கடலில் கொழும்பு- தூத்துக்குடி சரக்கு கப்பலில் தீ
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே 30 கடல் மைல் தொலைவில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, கப்பலின் ஒரு பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
கொழும்பிலிருந்து தூத்துக்குடியை நோக்கி எக்ஸ்பிரஸ் காவேரி என்ற சரக்குக் கப்பல் வந்து கொண்டிருந்தது. 30 கடல் மைல்தொலைவில் மன்னார் வளைகுடா பகுதியில் கப்பல் வந்தபோது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும், கடலோரக் காவல் படைக்கும் கப்பலின் கேப்டன் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்களுடன், துறைமுகத்திலிருந்து 2 கப்பல்கள் விரைந்தன, அதேபோல, கடலோரக்காவல் படைக் கப்பலும் விரைந்தது.
நடுக்கடலில் தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். கப்பலின் ஒரு பகுதி விபத்தில்சாம்பலாகி விட்டது. அதிலிருந்த பொருட்களின் சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.