சேது சமுத்திர திட்டம்: ப.சி. மீது ஜெ தாக்கு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இத் திட்டத்தை நிறைவேற்றுவதில்காலதாமதத்துக்கு மாநில அரசே காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ப.சிதம்பரம் சமீபத்தில் தமிழகம் வந்தபோது அவரது வழக்கமான பாணியில் தமிழக அரசுக்கு எதிராக, தவறானகுற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
சுனாமி நிவாரண விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணம் கிடைக்க விடாமல் தடுத்தார் சிதம்பரம். நிவாரணப் பணிகளைகெடுக்கும் விதத்தில் கீழறுப்பு வேலைகளைச் செய்தார்.
அதே போல கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த அறிக்கையை உரிய காலத்துக்குள் மாநில அரசு மத்திய அரசிடம்அளிக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் சிதம்பரம்.
மேலும் சேது சமுத்திரத் திட்டம் பற்றியும் பேசிவிட்டு, இத் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இத்திட்டம் நிறைவேறுவதில் காலதாமதத்துக்கு மாநில அரசே காரணம் என்றும் கூறியுள்ளார்.
பொறுப்பான மத்திய அமைச்சர் இவ்வாறு அபாண்டமாக பேசுவது அவரது பதவியின் தகுதிக்கு சற்றும் நல்லதல்ல. இத் திட்டத்தைநிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசுத் துறைகளுக்குள்ளேயே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
மத்திய அரசு உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே கேள்விக்குரியாய் உள்ளது. இந் நிலையில் தமிழக அரசின்மீது வீண் பழி போடுகிறார் ப.சிதம்பரம்.
இந்தத் திட்டம் நிறைவேற எனது அரசும் நானும் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாறு ஒருபுறம் இருக்க, இத் திட்டம் குறித்தஆய்வை முடிக்க எடுத்துக் கொள்ளப்படும் காலத்தை, தாமதம் என்று குற்றம் கூறி, அரசியல் ஆதாயம் தேட சிதம்பரம் முயல்வதுஅதிர்ச்சியாக உள்ளது.
இத் திட்டம் கனிவதற்கு தாங்களே காரணம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, பெயர் வாங்க சிதம்பரமும்அவரது கூட்டாளிகளும் மேற்கொண்டு வரும் மலிவான முயற்சி கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.